Saturday, December 3, 2016

இலக்கியா டயறிக் குறிப்பு - 27 மாதங்கள்

Edit Posted by with No comments

இலக்கியாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. 
ஆனால் பாட்டுக் கேட்பதென்றால் ஏக குஷி. அன்றொரு நாள் ரம் பம் பம் ஆரம்பம் பாட்டு காரில் ஒலித்த போது பின்னிருக்கையில் இருந்து பாட்டின் ரிதத்துக்கேற்ப அபிநயம் பிடித்துக் காட்டினார் இருந்த இருப்பிலேயே. அத்தோடு தர்மதுரை படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா பாட்டைக் கேட்டால் மெதுவாக ஆரம்பித்துத் துள்ளலோடு ஆட்டம் நிறையும் 😀
இலக்கியா இதுநாள் வரைக்கும் விரும்பித் திரும்பத் திரும்பப் பார்க்கும் ஒரே பாட்டு என்றால் அவர் முதலாவது பிறந்த நாள் வீடியோவில் கொடுத்த அஞ்சலி அஞ்சலி அஞ்சலி பாட்டு, அத்தோடு இப்போது இலக்கியா அம்மா அடிக்கடி பார்க்கும் இந்தச் சிறுமி பாடும் https://www.youtube.com/shared?ci=R1O2fCIYmks பாட்டும் சேர்ந்து விட்டது. தாளம் போட்டுக் கொண்டே பார்ப்பார்.

குழந்தையின் விரல்களைப் பிரித்து விட்டு உள்ளங்கையில் முழங்கையால் கீரை கடைஞ்சு சோறு ஊட்டும் விளையாட்டுக் காட்டும் போது ஒவ்வொரு கவளத்தையும் இது இலக்கியாக்கு, இது அப்பாக்கு இது அம்மாக்கு என்று பாவனை பிடித்து விளையாடுவேன். அப்போது நண்டூருது நரியூருது செய்ய ஆரம்பித்தால் முழங்கைக்குப் போக முன்பே கூச்சத்தோடு க்ளுக் என்று சிரிக்க ஆரம்பித்து விடுவார்.ஆனால் மீண்டும் செஞ்சு காட்டச் சொல்லுவார்.
அதே போல் என் கையை நீட்டித் தன் கூட்டாளிமார் அபிர், நோவா என்று பெயர்களைச் சொல்லிச் சோறு ஊட்டுவது போலப் பாவனை காட்டிவிட்டு நண்டூருது நரியூருது செய்வாராம்.

படம் போட்ட குழந்தைப் பாடல்கள் புத்தகத்தின் ஒவ்வொரு அட்டையிலும் இருக்கும் படத்தை வைத்தே இது இன்ன பாட்டு என்று அந்தப் பாட்டைத் தன் மொழியில் பாடுவார். சிங்கம், புலி, பூனை, நாய் ஐக் கண்டால் அதே மாதிரிச் சத்தம் வேறு போட்டுக் காட்டுவார். 

தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் இருந்து எதுவும் விளையாடி முடிந்ததும் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்று பொறுப்பாக எடுத்துப் போய் வைப்பார். பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் மற்றைய பிள்ளைகளின் சூப்பி (dummy) ஐக் கூட இனம் கண்டு இது இன்னாருடையது என்று தேடிப் போய்க் கொடுப்பாராம்.
விளையாட்டுப் பொம்மையை விட வீட்டுப் பொருட்கள், பால் போத்தல் போன்ற விளையாட்டுப் பொருட்கள் தான் இலக்கியாவுக்குப் பெரு விருப்பானவை.

ஒரு காலத்தில் அப்பா என்ற வார்த்தையைக் கேட்க எவ்வளவு தூரம் தவம் கிடந்தேன் இப்போதெல்லாம் இலக்கியா அந்த வரத்தைத் தாராளமாகவே கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஏதாவது தேவை என்றால் "அப்பா" என்று விளித்து அதற்கு மேல் தன்னுடைய சங்கேதச் சொற்களைப் பொருத்திக் கேட்பார். அதை நான் புரிந்து கொண்டு செய்வேனாம் 😀
என்னைக் காணாத நேரத்திலும் அப்பா அப்பா என்று தேடுவதால் இப்போதெல்லாம் இயன்றவரை சமூக உலாத்தல்களை ஒதுக்கி விட்டு இலக்கியாவே கதி என்று இருந்து விடுவேன்.

இலக்கியாவை நித்திரைக்கு அழைத்துச் செல்வது என் நாளாந்தத் திருப்பணி. நான் வரும் வரை நித்திரை கொள்ளாமல் தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருப்பார். இலக்கியாவுக்கு அவரின் தாய் தன் நண்பி போல அடிக்கடி தன் தாயைச் சீண்டி வேடிக்கை காட்டுவார். நான் வந்து விட்டால் தன் தாயைப் போகச் சொல்லிச் சைகை காட்டி விட்டு என்னைக் கூப்பிடுவார் 😀

0 comments:

Post a Comment