Saturday, September 10, 2016

இலக்கியாவின் முடியாட்சி 💇🏻

Edit Posted by with No comments
இருபத்து நான்கு மாதங்களுக்குப் பொதுவில் இன்று மூன்றாவது முறையாகத் தன் முடி துறந்தார் இலக்கியா. முடி துறத்தல் என்றால் மொட்டை ராஜேந்திரன் அளவுக்கெல்லாம் இல்லை. 
இலக்கியா பிறந்த நாள் தொட்டு எல்லா இந்து மதச் சடங்குக்கும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு ஆனால் "மொட்டை அடிக்காமல்" காது குத்துதல் என்ற நிபந்தனை மட்டும் விதிவிலக்காக :-)

"பொம்பிளைப் பிள்ளை எண்டால் மொட்டை அடிக்கக் கூடாது பிள்ளை பாவம்" என்ற இலக்கியா அம்மாவின் கொள்கைக்கு நான் முரணாக இருந்தால் என்னுடைய நிலை அல்லது தலை சூரியன் சரத்குமார் அல்லது அறச்சீற்றம் கூடினால் ஜென்டில் மேன் சரண்ராஜ் அளவுக்கு மோசமாகி விடும் என்பதால் அடக்கி வாசித்தேன்.

நான் சின்னப் பிள்ளையாக இருந்த காலம் தொட்டு எங்களூரில் சபா சகோதரர்கள் தான் சிகை அலங்கார நிபுணர்கள். ஜானி பட ரஜினியின் ஓவியம் தீட்டப்பட்டு "நியூ வேவ் சலூன்" என்று புதுக்கடையைக் குளக்கரை முகப்பில் திறக்கும் வரை எங்களூர் மக்கள் கை கொடுத்தார்கள். விடிகாலையிலேயே கூட்டி மெழுகியிருக்கும். காத்திருப்பவர்கள் படிக்க ஈழநாடு, உதயன் ஈறாக இருக்கும். வானொலிப் பெட்டி பாடிக் கொண்டிருக்கும். ஒருமுறை வானொலியில் 
"தலையைக் குனியும் தாமரையே" பாட்டு ஓடிக் கொண்டிருக்க பொன்னுத்துரைக் கிழவர் தாளம் போட்டுக் கொண்டே தூங்கி வழிந்ததும் நினைப்புக்கு வருகுது. பெடியளுக்கு "மங்கி க்றொஸ்", பொம்பிளைப் பிள்ளையள் எண்டால் "டயானா கட்" இது தான் அவர் வழமை.
அண்மையில் மிஷ்கினின் சவரக்கத்தி பாடல் https://www.youtube.com/shared?ci=JgjhJdM1q3A என்னை உடனே ஆட்கொண்டதற்கு அதுவொரு உப காரணம்.
பணப் பசை கொண்டவர்கள் வீடு தேடிப் போய் முடி வெட்டும் வழக்கமும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் சமூகச் சட்டத்தின் விளைவாக சிகையலங்கார நிபுணர்கள் யாரும் வாடிக்கையாளத் வீடு தேடிப் போய் முடி வெட்டவோ, தாடி மழிக்கவோ கூடாது, நியாயமான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு  வந்தது. அதுவரை கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டியது தான். தலை முடி வெட்டும் போதே எனக்கு கண்கள் செருக ஆரம்பிக்கும். தலை கவிழும் போதெல்லாம் சூரனின் தலையை மாத்தி நிமித்துமாற் போல சபா அண்ணர் நெட்டி நிமிர்த்துவார். சவரக்கத்தி கன்னவோரங்களில் "கிர்க்கு கிர்க்கு" என்று வெட்டும் போது கிட்டும் சுகமிருக்கிறதே ஆகா என்று பழைய நினைப்பில் சிறிது நேரம் மூழ்கிப் போனேன்.

எட்டு மாதங்கள் கழித்து நான் கடவுள் ஆர்யா மாதிரியான தோற்றத்தில் இலக்கியாவைக் கூட்டிக் கொண்டு போகிறோமே அந்நியப்பட்டு விட்ட சிகையலங்கார நிபுணரைக் கண்டு பயப்புடுமோ குழந்தை என உள்ளூர ஒரு பயம் இருக்கத் தான் செய்தது. ஜொனி என் ஆஸ்தான சிகையலங்கார நிபுணர். மத்திய கிழக்கு நாட்டவர், சிரித்த முகம்.
இலக்கியாவுக்குப் பொன்னாடை போர்த்திய அவரைப் பார்த்து விநோதமாக ஒரு பார்வை.
பிள்ளைக்கு எது தோதாக இருக்கிறதோ அதன்படி வெட்டுங்கள் என்றோம். அவரோ இலக்கியா அம்மாவை விடக் கவனமாக, நோகாது முடியின் நுனியை மட்டும் கொறித்துக் கொண்டிருந்தார். இலக்கியா ஏவிஎம் பூமி உருண்டை போல உருண்டு உருண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் தன் மேல் விழும் தலை முடி எச்சங்களைத் தன் தாயிடம் கொடுத்தார். தலை முடி வெட்டி முடியும் தருணமது, தாயைப் போல பிள்ளை என்று நினைத்த என் நினைப்பில் திடீரென்று எதிர்பாராத மாற்றம்.
சிகையலங்கார நிபுணர் ஜொனியை நோக்கித் தன்னைத் தூக்கச் சொல்லி என்னிடமிருந்து பாய்ந்தார். அவரைக் கட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடித்து அழுகை வரை போயாச்சு. இலக்கியா அம்மாவுக்குத் தெரியாமல் க்ளுக்கென்று சிரித்துக் கொண்டேன் அங்க்
ஒரு வழியாக இலக்கியாவைக் கவர்ந்து வீட்டுக்குப் போகும் வழி நெடுக ஜொனியைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்துக் கொண்டே வந்தார் இலக்கியா.

0 comments:

Post a Comment