Saturday, June 18, 2016

🎸இசைத் தேனே

Edit Posted by with No comments
🎸இசைத் தேனே இசைத்தேனே தேனே தென்பாண்டி மீனே 🍼தன் தொடையில் தாளம் போட்டுப் பாட்டுக் கேட்கும் இலக்கியா 🐇

Monday, June 6, 2016

தண்ணீர் குழாயைப் பார்த்துப் பிள்ளையார்

Edit Posted by with No comments
தண்ணீர் குழாயைப் பார்த்துப் பிள்ளையார் என்று நினைத்துக் கும்பிடும் இலக்கியா 🙄🙄🙄🙄

Friday, June 3, 2016

இலக்கியா என்னும் கதை சொல்லி 📚

Edit Posted by with No comments

குழந்தையின் கையை வாங்கி மடிந்து கிடக்கும் விரல்களை விரித்து விட அது தொட்டாச் சிணுங்கி போல சுருங்கிக் கொள்ள, மீண்டும் அந்த விரல்களைப் படிய வைத்து விட்டு குழந்தையின் உள்ளங்கையில் என் முழங்கையால் உருட்டி "கீரை கடைஞ்சு கீரை கடைஞ்சு" சொல்லி விட்டு குழந்தைக்கும் அப்பா, அம்மா, எல்லோருக்கும் சோறு ஊட்டுவது போலப் பாவனை செய்து விட்டு குழந்தையின் கையை நீட்டிவிட்டு மெல்ல மெல்ல ஆட்காட்டி விரல், பெருவிரலால் நகர்த்திக் கொண்டு "நண்டூருது நரியூருது" சொல்லிக் கொண்டு போனால் கூச்சம் இராது புதினமாகப் பார்த்துக் கொண்டிருப்பா. பின் மெல்ல மெல்லக் கூச்ச உணர்வு வந்து இப்போது முழுமையாக ஆட் கொண்டு விட்டது இலக்கியாவுக்கு. "கீரை கடஞ்சு" சாப்பாட்டு விளையாட்டு முடிந்து விரல்களை அவரின் உள்ளங்கையைத் தாண்டி நகர்த்த ஆரம்பிக்கும் போதே க்ளுக் க்ளுக் என்று சிரித்துக் குலுங்க ஆரம்பித்து விடுவார் இலக்கியா.
iPad இல் தனக்கேற்ற குழந்தைப் பாட்டைத் தேடிப் பார்க்குமளவுக்கு இலக்கியா சொந்தக் காலில் நிற்கப் பழகிவிட்டார். சொந்தக் காலில் நிற்கும் போது ஒரு கையில் ஒரு விளையாட்டுப் பொருள் இன்னொரு கையில் இன்னொரு விளையாட்டுப் பொருள் இருக்கும்.
இப்போது இலக்கியாவின் தொட்டிலுக்குள் Piano,Electronic Guitar, Xylophone, புல்லாங்குழல் இவற்றோடு புத்தகங்களும் சேர்ந்து விட்டன.
இலக்கியாவின் வயதுக்கேற்ற பொருத்த புத்தகம் கிட்டும் வரை தேடிக் கொண்டிருந்தேன். தமிழில் என்றால் நானே ஏராளம் சொல்லி விடலாம்.
என் சிறு வயதில் அப்பாவிடம் இரவில் படுக்கப் போகும் முன் கதை சொல்லக் கேட்டது மங்கிப் போன புகைப்படமாக நினைவில் இருக்கு.
பின்னர் அப்பா வாங்கித் தந்த ஈசாப் நீதிக் கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்துப் பாடமாக்கிக் கொண்டிருந்தேன்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் இலக்கியாவுக்கான விளையாட்டுப் பொருள் வாங்கும் சிறுவர் கடையில் ஒரு பரிசுப் பொதியைப் பார்த்தேன். ஒரு யானைக் குட்டியும், புத்தகமும் அதற்குள் இருந்தது.
வாங்கி வந்து பிரித்துப் பார்த்தேன்.
"Meiya and Alvin"
http://meiyaandalvin.ca
என்ற இரண்டு குட்டிப் பாத்திரங்களை மையப்படுத்திய, குழந்தைகளுக்கான வேடிக்கைப் பொருட்கள் அவை.
Meiya என்ற சுண்டெலிப் பெண்ணும் Alvin என்ற யானைக் குட்டிப் பையனும் பாத்திரங்கள். குழந்தைக்குப் பற்கள் வளரும் போது முரசு கூசும். எதையாவது கடிக்க வேண்டும் போல ஆக்ரோஷம் இருக்கும். அதற்காகச் சந்தையில் பல கருவிகள் உண்டு. இந்த Meiya மற்றும் Alvin விளையாட்டுப் பாத்திரங்களையும் விரும்பினால் கடித்துப் பழகிப் பார்க்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு இனிய காலைப் பொழுதில் Meiya தன் நண்பன் Alvin உடன் காட்டுப் பூங்காவுக்குப் போவது தான் அந்தக் கதைப் புத்தகம். அந்தப் பூங்காவில் மிருகங்கள், பறவைகளின் சத்தங்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு போவார்கள்.
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரேயொரு வாக்கியமே இருக்கும் அளவுக்கு இலகு நடை.
இலக்கியா படித்துக் "கிழித்து" ப் போட முடியாத அளவுக்குத் தடித்த பக்கங்கள் கொண்ட சின்னப் புத்தகம் அது.
மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன் ஶ்ரீதேவிக்கு "முன்பு ஒரு காலத்துல முருகமலைக் காட்டுக்குள்ள தந்திரம் மிகுந்த ஒரு நரி வாழ்ந்து வந்தது" என்று நரிக்கதை சொல்லுமாற் போல நானும் புத்தகத்தை எடுத்து இலக்கியாவுக்கு Meiya தன் நண்பன் Alvin உடன் காட்டுப் பூங்காவுக்குப் போன கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இந்த நேரத்தில் கதையோடு கதையாக என் இத்தனை வருட காலத்தில் ஏதாவது ஒரு மேடையில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நிராசையாகவே இது நாள் வரை இருந்தது. இலக்கியா தான் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
Meiya என்ற அந்தச் சுண்டெலிப் பெண் படுக்கையில் இருந்து எழுந்து வருவது போல, தனது நண்பன் Alvin என்ற யானைக் குட்டி தும்பிக்கையைக் காட்டி நடப்பது போல,
காட்டிலே இவர்கள் காணும் குரங்கு, பறவைகள், தேனீக்கள் போன்றவை போடும் சத்தம் என்று பக்கங்கள் கடந்து போகத் திடீரென்று Alvin என்ற அந்த யானைக் குட்டி குட்டை ஒன்றில் விழுந்து விடுவான். தண்ணீரில் விழுந்தெழும்பி Alvin சிரிக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த Meiya மேல் Alvin தண்ணீரை வீச அவளும் சிரிக்க இப்படியாக அவர்களின் காட்டுப் பயணம் முடிகிறது. நானும் இதையெல்லாம் விதவிதமான கை, கால் சேட்டைகள், குரலமைப்பால் செய்து காட்ட இலக்கியா என்னை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தா.
கதை முடிந்ததும் புத்தகத்தை எட்டி வாங்கினார் இலக்கியா.
என் கையை இழுத்துத் தன்னைக் கவனிக்கச் சொன்னார்.
புத்தகத்தின் முதலட்டையில் Meiya கட்டிலில் இருந்து எழும்பும் படம். இலக்கியா தானும் இரண்டு கைகளையும் அகல விரித்துக் காட்டினார்.
கொர்க்கு கொர்க்கு - இலக்கியா தவளைச் சத்தம்
ப்பிஸ்ஸ்ஸ்ஸ் - இலக்கியா தேனீக்கள் போலச் சத்தம்
வொவ் வொவ் - இலக்கியா நாய் குலைப்பது போலச் சத்தம் ( இந்தப் புத்தகத்தில் நாய் என்ற பாத்திரமே இல்லை யுவர் ஆனர் அவ்வ்வ்)
குக்கூ கூ - இலக்கியா குருவிச்சத்தம் போட்டுக் காட்டினார்
தத்த தாத்தா ஆ ஆ அ அ திதிதிதி - பக்கங்களைப் புரட்டும் போது இலக்கியா இடைக்கிடை கதை சொல்லுறாவாம் எனக்கு ஓக்கே 😀
ஸ்ப்ளாஷ்ஷ்ஷ் - Alvin அந்த நீர்க்குட்டைக்குள் விழுந்து விட்டான் தானும் உடம்பைச் சரித்து விழுவதைப் போலக் காட்டி விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
இலக்கியா எனக்குக் கதை சொல்லி முடிந்தது.
சரி அடுத்தது என்ன?
மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார் இலக்கியா அவ்வ்வ்வ்வ்
🏃🏃🏃
இலக்கியா எங்களுக்கு உயிர் கொடுத்து இன்றோடு 21 மாதங்கள்