Tuesday, May 2, 2017

இலக்கியாவுக்கு வளர்க்க ஒரு மாடு வேணுமாம் 🐄

Edit Posted by with No comments


சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப் பயணத்தில் நகரத்தின் சுவடுபடாத ஒரு பண்ணை சார்ந்த கிராமியச் சூழல் இருக்கிறது. அங்கே Malgoa எனும் இடத்தில் மாதா கோயிலைத் தரிசிக்க நாம் ஒவ்வொரு வார இறுதியிலும் பயணப்படுவது வழக்கம்.

எங்கள் பயண வழித்தடத்தின் இரு மருங்கும் புல் மேடுகள் இருபக்கமும் நிறைந்த இடம் வரும் போது குதிரை, மாடு பார்க்கத் தயாராகி விடுவார் இலக்கியா. ஒவ்வொரு குடியிருப்பிலும் கட்டியிருக்கும் குதிரைகளையும், மேயும் மாடுகளையும் கண்டு புழுகத்தில் விழுந்து விழுந்து சிரிப்பார் காருக்குள் இருந்து. இன்றைய பயணமும் அப்படித்தான். ஆனால் எங்களின் போதாத காலம் மேய்ச்சல் மாடுகள் கண்ணில் அகப்படவில்லை. குதிரைகள் தான் கருப்பும், மண்ணிறமும் அல்லது மண்ணிறமும் வெள்ளையுமாகக் கலந்து திரிந்து கொண்டிருந்தன. முதலில் ஆர்வமாகப் பார்த்தவர் பிறகு எனக்கு மாடு பார்க்க வேண்டும் என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்து விட்டார் இலக்கியா.
எங்கட வாழ்நாளிலை ஒரு குதிரை கண்டிருப்பமோ? பத்தொன்பது வயது வரேக்க தான் தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் குதிரை கண்டதாக ஞாபகம் அது வரைக்கும் நாம்பன் மாடுகளோட தானே எங்கட சீவியம் இவ என்னடா எண்டால் குதிரை வேண்டாம் மாடு வேணும்
எண்டு இலக்கியா அப்பா மனசுக்குள் புழுங்கினர்.

ஒருவாறு இலக்கியாவைச் சமாதானப்படுத்தி கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது
வழியின் மறுபக்கம் மாடுகளும், கன்றுக் குட்டிகளும் தென்பட்டன. காரை வளைச்சுப் புல் தரைப் பக்கம் இறக்கி விட்டு இலக்கியாவுக்கு மாடுகளைக் காட்டினால் அவரின் புளுகத்துக்கு அளவேயில்லை. தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துச் சிரித்துக் கொண்டாடினார் ம்மோ என்று கத்திப் பார்த்தார். கொஞ்ச நேரம் அங்கே இருந்து விட்டுக் கிளம்பும் போது தான் பிரச்ச்னை ஆரம்பம். அந்த மாடுகளை வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என்று இலக்கியா தன் மொழியில் பேசி போதாக்குறைக்கு எங்களுக்கு விளங்கட்டும் என்று கைப்பாசையிலும் காட்டினார்.
இதென்னடா பிரச்சனையாப் போச்சு என்று ஒருவாறு அவரைப் பிராக்குக் காட்டி மாடுகளுக்கு Bye சொல்ல வைத்துக் கிளம்பியாச்சு.
இலக்கியா தன் தாயின் வயிற்றில் இருக்கும் போது கொஞ்சம் அதிகப்படியாகவே ராமராஜன் பாட்டைக் கேட்டுத் தொலைத்து விட்டோமோ என்று இலக்கியா அப்பா யோசித்துக் கொண்டே காரை ஓட்டினார்.