Thursday, December 31, 2015

இழந்த என் இனிமைகளைக் கண்டு கொண்டாடிய 2015

Edit Posted by with No comments
2015 ஆம் ஆண்டின் பயணம் மெல்லத் தன் நிறைவிடம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது எழுதிக் கொண்டிருக்கிறேன். பக்கத்தில் இலக்கியா உறங்கிக் கொண்டிருக்கிறார்.
"பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட 
 இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே"
இதோ ஒரு மணி நேரம் முன்பு தான் இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரும் போது இதே பாடலைக் கேட்டேன், அன்று போல இன்றும் கண்கள் பனித்தன. 
"உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தைக் காட்டச் சொல்லு
 புது இடம் புது மேகம் தேடிச் செல்வோமே"
பாடலாசிரியர் தாமரை எவ்வளவு தூரம் அனுபவித்து அந்தப் பாடலின் ஓவ்வொரு வரிகளை எழுதியிருப்பாரோ அவ்வளவுக்கவ்வளவு இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் கலந்து கட்டித் திரட்டித் தந்தது போல இருக்கும்.

நரேஷ் ஐயர் இந்தப் பாட்டை ஆரம்பிக்கும் போது மெல்ல மெல்ல ஒடுங்கிக் போய் மனசு சரணாகதி அடைந்து போய் விட நாலாவது நிமிடத்துளியில் மஹதி கொடுக்கும் "ஆஹாஹா" என்ற ஆலாபனையில் அப்படியே உடைந்து அழுது விடுவேன். 
இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு என் வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பாட்டு வெளிவந்த இந்த ஆண்டில் எம் செல்வ மகள் இலக்கியாவின் பிறப்பின் ஒவ்வொரு சதவிகித வளர்ச்சியையும் மிக நெருக்கமாகப் பார்த்துக் கொண்டே வரும் எனக்கும் என் மனைவிக்கும் கூட இந்தப் பாட்டு மிக நெருக்கமாக உட்கார்ந்து விட்டது.
இடம், பொருள், ஏவல் இல்லாது இந்தப் பாட்டு என்னைக் கடக்கும் போதெல்லாம் அதே உணர்வு. இந்த ஆண்டின் ஒரு நாள் விடிகாலை ஆறுமணிக்கு உடற்பயிற்சி நிலையத்தில் ஓட்டப் பயிற்சி எடுக்கும் போது காது வழியே புகுந்த பாட்டு கண் வழியே வழிந்தோடியது.

உலகத்தில் எத்தனை செல்வங்களை அள்ளிக் கொட்டினாலும் ஒரு குழந்தை தன் படிமுறை வளர்ச்சியைத் தன் பெற்றோருக்குக் காட்டிக் கொண்டே வாழும் வாழ்க்கையை நாம் அனுபவிப்பது போல ஒன்றுமே கிடையாது.
இலக்கியாவின் முதல் மூன்று மாதங்கள் கடந்த ஆண்டில் நிறைந்து இந்த ஆண்டில் அவர் முழுமையான ஒரு குழந்தையாக வளரும் போது அவருக்குக் கிட்டிய சந்தோஷங்களில் சிரித்தோம், கவலைகளில் அழுதோம். அவருக்கு நோய், நொடி வரும் போது எம் உடலின் ஒரு பாகம் வெளியில் நின்று அந்தரிப்பது போல இருக்கும். 
ஆண்டவன் மீதான நம்பிக்கையும், வாழ்க்கையில் பிடிப்பையும் இன்னும் அதிகமாக ஏற்படுத்தி விட்ட ஆண்டு 2015.
இலக்கியாவின் பிறந்த நாளை அதே நாளில் நாம் பிறந்து வளர்ந்த தாயகத்தில் எம் பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்தது போன்ற மறக்க முடியாத பதிவுகளை இந்த ஆண்டு ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த ஆண்டில் எந்தக் காரியம் செய்ய முனைந்தாலும் இலக்கியாவை முன் வைத்தே முடிவுகள் அமைந்திருக்கின்றன.
கவலைகளும், கஷ்டங்களும் மிகுந்த ஆண்டாக இருந்தாலும் சந்தோஷங்களைச் சரி சமமாகப் பங்கிட்ட வகையில் இந்த ஆண்டு மிகவும் நிறைவான ஆண்டாகவே எங்களுக்கு அமைந்திருக்கிறது.
இலக்கியா இப்போது நம் செயல்களை உன்னிப்பாகப்  பார்த்து தானே செய்து பார்க்கவும், நாம் பேசும் போது அதே போலத் தன் மழலையில் பேசிப் பார்க்கவும் முனைகிறார். 
தானே உடம்பைப் பிரட்டி, எழுந்து நடக்கவும், பேசவும் கற்றுக் கொள்ளும் குழந்தையை விடவா நாம் சாதித்து விட்டோம்.

வாழ்க்கை எனும் ஓடம் யாருக்காகவும் காத்திருக்காது, வழித் துணையாக வந்தவர்கள் வழிகாட்டி விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் நிரந்தர ஓய்வெடுத்த ரணம் மனதுக்குள் இருந்தாலும் வாழ்ந்து கழித்து விட வேண்டும் அதுவும் எமக்குப் பிடித்த வாழ்க்கையாக, மற்றவர்களின் அளவுகோலுக்கு அமைவாக அல்ல என்ற நெஞ்சுரம் தான் இந்த ஆண்டையும் வெகு நிம்மதியாகக் கடத்தியிருக்கிறது.

" ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழே
   அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல"

2015 ஆம் ஆண்டு தந்த அதே நம்பிக்கையோடு 2016 ஆம் ஆண்டுக்குப் பயணிக்கிறோம் நாம்.

Friday, December 25, 2015

பல்லுக் கொழுக்கட்டை கொட்டினோம்

Edit Posted by with No comments
ஆயிரம் தந்த இசைஞானியின் இசை பரவ இலக்கியாவுக்குப் பல்லுக் கொழுக்கட்டை  🍼

காலை ஐந்து மணி சிட்னி முருகன் சந்நிதியடைந்து திருவெம்பாவைப் பாடல்களோடு காலைப் பூசையுமாக உள்ளம் உருகித் தொழ திருவெம்பாவை நன்னாளின் பொழுது புலர்ந்தது.

கிறிஸ்துமஸ் இன்று ஏசு பாலனின் பிறப்பினைக் கொண்டாட சிட்னியின் புற நகர்ப் பகுதியில் இருக்கும் மல்கோவா மரியன்னை ஆலயத்தில் சங்கமம்.

இந்த இரண்டு பயணங்களையும் இணைக்கிறது இசைஞானியின் "தாரை தப்பட்டை"

இன்று இலக்கியாவுக்கு "பல்லுக் கொழுக்கட்டை" சடங்கு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தோம். திருவெம்பாவை, கிறிஸ்துமஸ் இவற்றோடு இந்த ஆயிரமாவது இசைப் படையலும் சேர்ந்து விசேஷமாக்கி விட்டது.

"பல்லுக் கொழுக்கட்டை" குழந்தைக்குப் பற்கள் வளர ஆரம்பிக்கும் போது அந்த வளர்ச்சியைக் கொண்டாட நாம் எடுக்கும் வீட்டுத் திருவிழா என்பது மரபு.
கொழுக்கட்டை இதழ்களில் பற்களைப் போல் வெள்ளைத் தேங்காய்ச் சொட்டுப் பதித்துத் தயாராகி விட்டது அழகழகான பல்லுக் கொழுக்கடைகள். 
இரண்டு ஆலயங்களுக்குப் போய் வந்து இறை ஆசியோடு இலக்கியாவை மேடையில் இருத்தி அவர் மேல் பல்லுக் கொழுக்கட்டைகளைக் கொட்டிக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

என் இசைத் தாய் இளையராஜா சுரந்த
1000 வது குழந்தை  "தாரை தப்பட்டை.
ஒவ்வொரு பாடலாக காதுகளால் வழித்து எடுத்துப் பத்திரமாக உடலெங்கும் பரவவிடுகிறது அந்தப் பரவச நிலையில்

இறுதிச் சொட்டாக "Theme"  ஆரம்பிக்கவும் மயிர்கால்கள் குத்திட்டு கண்களில் நீர் உடம்பெல்லாம் ஆவியாகி மேலெழுமாற் போன்றதொரு உணர்வு.
இது பொய்யல்ல மெய்யே.

பாருருவாய பிறப்பற வேண்டும் 
பத்திமையும் பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே 
செங்கமலம் மலர்போல்
ஆருருவாய என் ஆரமுதே 
உன்அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி 
என்னையும் உய்யக் கொண்டருளே.

Wednesday, November 18, 2015

வெளிச்சப் பூ

Edit Posted by with No comments
இன்னொரு குழந்தை அழுவதைப் பார்த்து வாயைப் பிழிந்த இலக்கியா தன் அப்பாவைக் கண்டதும் பளிச்சென்று வெளிச்சப் பூ 😀 பராமரிப்பு நிலையம்

Tuesday, November 3, 2015

இலக்கியா நாட்குறிப்புகள் 03.11.2015

Edit Posted by with No comments

எந்த விதப் பிடிமானமும் இன்றித் தானே எழுந்து நிற்கப் பார்த்து "தொம்" என்று கீழே விழுந்து விட்டு எனக்கு வலிக்கலையே, எனக்கு வலிக்கலையே என்குமாற் போலக் குலுங்கிச் சிரித்து விட்டு மீண்டும் எழுந்து நிற்கும் பயிற்சி. இதைப் பார்க்கும் போது சலங்கை ஒலி படத்தின் கமலஹாசன் நிறை போதையில் கிணற்றுக் கட்டிலில் "தகத ததிமி தந்தானா" போடுவது போல இருக்கும்.

அப்பா வெளிக்கிட்டு நல்ல உடை உடுத்தினால் வெளியே போகப் போகிறார் என்று தானே அர்த்தம். அம்மாவின் கட்டுக்குள் இருந்து திமிறி அடித்து அவரைத் தள்ளி (ஏறக்குறையத் தள்ளி விழுத்தி) ஆர்ப்பாட்டம் செய்து தானும் வரப் போவதாக டாட்டா காட்டி சைகை செய்வார். பாவம் என்று தூக்கிக் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் தன் தாய்க்குப் பறக்கும் முத்தம் கொடுப்பாராம். அப்பாவும் நானும் வெளியே போகிறோம் என்பதற்கான சங்கேத மொழி அது.

பாட்டுக் கேட்பதென்றால் அலாதி இஷ்டம். மெல்லிய இசையோடு வரும் ( மெலடி) பாடல் என்றால் ஓஓஓ ஆஆஆ என்று ராகம் இழுப்பாராம்.
டப்பாங்குத்துப் பாட்டு என்றால் என் மகளைப் பிடிக்கவே முடியாது. இருந்த இடத்திலேயே கால்களைக் காற்றடிக்கும் பம்பு மாதிரி வளைத்து நெளித்து ஆடும் அதே நேரம் இசை நுணுக்கத்துக்கேற்ப இரண்டு கைகளும் அபிநயம் பிடிக்கும். இன்று காலை காரில் பயணிக்கும் போது ஜீன்ஸ் படத்தின் ஹைர ஹைர ஹைரோப்பா பாட்டு கனேடிய வானொலி வழியாக வந்த நேரம் சடுதியாக அந்த இசைக்குப் பறவை தன் சிறகை விரித்துக் குவிக்குமாற் போல ஆட்டம் ஆடினார் :)

அம்மா சொல்லுங்கோ என்றால் கள்ளமாகச் சிரிப்பார், அப்பா சொல்லுங்கோ என்றால் அப்ப்ப்ப்ப்பா என்று ஒரு இழுவை.

இரண்டு மாதங்களுக்குப் பொதுவில் மேலே இரண்டு பற்கள் கூட ஒரு மெல்லிய உதவியாளர், கீழே இரண்டு பற்கள் என்ற கணக்கு வைத்திருக்கிறார். பல்லுக் கொழுக்கட்டை அவித்தால் தான் பற்கள் கெதியா வளரும் என்று இலக்கியாவின் பெரியப்பாவின் வேண்டுகோளை இந்த மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.

சாய்வாக இருத்தி விட்டால் பால் புட்டியைத் தானே இரு கைகளாலும் ஏந்திக் குடிக்கப் பழகி விட்டார். பக்கத்தில் இருக்கும் அப்பாவின் மேல் தன் இரு கால்களும் மகாராணித் தோரணையில் போட்டிருப்பார்.!

மசித்த சோறு, பாஸ்டா, அவித்த காய்கறி, சீனச் சாப்பாடு எல்லாம் மென்று மெல்லப் பழகி வருகிறார்.

கேலியாகச் சிரித்துக் காட்டுவது, ஏதோ பேச எத்தனிப்பது போல தத்தக்க பித்தக்க ஒலி எழுப்புவது, கண்களைச் சிமிட்டி நளினம் காட்டுவது, நேசமாகத் தன் தலையைத் தன்னைத் தூக்கி வைத்திருக்கும் தன்னால் பிரியமானவர்கள் என்று அடையாளப்படுத்தியோருக்கு நிரூபிப்பது இதெல்லாம் சமீபத்திய புது வரவுகள்.

இலக்கியாவை அவரின் தொட்டிலில் விடுவது அவரளவில் செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதியின் நிலைக்கு ஒப்பானதாம்.

இலக்கியா தன் அப்பாவின் கண்காணிப்புடன் தான் கட்டிலில் படுப்பாராம்.
அந்த நீண்ட கட்டிலில் தன் பிள்ளையை இன்னொரு அந்தத்தில் கிடத்தி விட்டு, தூங்கும் போது அப்பாவின் கை,கால் படக்கூடாது என்று கவனமாகப் படுப்பார் இலக்கியாவின் அப்பா. 

நடுச்சாமம் தாண்டிய விடிகாலையில் புழுக்குட்டி போல உருண்டு வந்து நிமிர்ந்து படுத்திருக்கும்
தன் அப்பாவின் நெஞ்சில் தலை வைத்துக் கவிழ்ந்து படுப்பாராம் இலக்கியா. அந்த நேரம் இலக்கியாவின் அப்பாவுக்கு பூரிப்புக் கண்களில் வழியுமாம், அத்தனை ஆண்டுகள் திரட்டி வைத்திருந்த கவலை எல்லாம் கழுவித் துடைத்துக் கொண்டு.

இலக்கியாவின் அப்பா சொல்லுவார் இலக்கியாவின் அம்மாவிடம்,
"எங்களின் பிள்ளையாகப் பிறந்ததை இலக்கியா பெருமையாக நினைக்கும் அளவுக்கு நாங்கள் இவவை வளர்க்கோணும்" 

எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொன்ன இலக்கியா பிறந்து இன்றோடு பதினான்கு மாதங்கள்.

http://www.youtube.com/watch?v=SsQ74n9dc3k&sns=tw

Saturday, October 31, 2015

தள்ளாட்டத்தோட இலக்கியா

Edit Posted by with No comments
கட்டிலில் தானே எழும்பி நின்று கொண்டிருக்கிறா தள்ளாட்டத்தோட இலக்கியா 😂😂😂

Wednesday, October 21, 2015

எங்கள் வீட்டு சரஸ்வதி தேவி

Edit Posted by with No comments
இன்று காலை என்னிடமிருந்த இலக்கியா தன் தாய் கை நீட்டவும் மறுத்துவிட்டு என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டார் 😍எங்கள் வீட்டு சரஸ்வதி தேவி

Friday, October 9, 2015

தூளியிலே ஆட வந்த இலக்கியா

Edit Posted by with No comments
தூளியிலே ஆட வந்த இலக்கியா

இலக்கியாவின் பிறந்த நாள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வோடு ஒரு இசை ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்றதொரு இலட்சியம் எனக்குள் இருந்தது.
காரணம் என் சந்தோஷத்திலும், சோகத்திலும் இளையராஜாவே வழித்துணையாகவே வந்து கொண்டிருக்கிறார். ராஜாவின் பாடல்கள் இல்லாத ஒரு சூழல் எனக்கு வாய்த்திருந்தால் நான் இருந்திருப்பேனோ தெரியாது.

பிறந்த நாள் மண்டபத்துக்கு நுழையும் போதே "ஆயிரம் மலர்களே மலருங்கள்" என்று பப்பு அண்ணரின் ஒலியமைப்பின் வழியாக அட்டகாசமான ஒலித்தரத்தில் மண்டபத்தை நிறைத்த இளையராஜா பாடல்கள் ஒவ்வொன்றாக அணி செய்ய பிறந்த நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.

இலக்கியா வயதில் இருந்து என்னை வளர்த்த அண்ணன் விருந்தினரை வரவேற்றுப் பேசினார்.

நண்பர் முரளி வெங்கட்ராமன் மற்றும் அருணா பார்த்திபன் ஆகியோர் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைத் தம் அழகான குரலால் தேனிசை மழையாகச் சொரிய ஒரு மணி நேரம் கடந்து மணி மணியாகப் பாடல்கள் விருந்தினர் ஒவ்வொருவருக்கும் செவிக்கினிமை சேர்த்து மகிழ வைத்ததைக் கண்ட போது எனது மனதில் பெரும் பூரிப்பு. பாடல்கள் எல்லாமே மாசற்ற மாணிக்கங்களாக இந்த இருவரின் குரலில் வெளிப்பட்டதை இந்த நிமிடம் வரை எனக்கு வந்து சேரும் நண்பர்கள், உறவினர்களின் சிலாகிப்பால் நெகிழ்ந்து போய் இருக்கிறேன். 
"ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து "தூளியிலே ஆட வந்த" எல்லாம் நிரம்பி "நான் தேடும் செவ்வந்திப்பூ" வில் நிறைந்தது.

இசைஞானி இளையராஜாவின் குழுவில் திரு நெப்பொலியன் (அருண்மொழி) உள்ளிட்ட ஓரிரு பாடகர்களை, இசைக்கலைஞர்களை அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தலாமோ என்று எட்டு மாதங்களுக்கு முன்பே ஒரு பேராசை துளிர் விட்டிருந்தது. ஆனால் ஏற்பாடுகளைக் கவனிக்க நேரம், காலம் பிடிக்கும் என்று முயற்சியைக் கைவிட்டேன். உள்ளூரில் சிப முன்னணி இசைக்கலஞர்களைத் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் :p

ஆபத்பாந்தவனாக வந்தார் முரளி. பேச்சுவாக்கில் இந்த முயற்சியைச் சொன்ன போது "நான் பண்ணிக் குடுக்குறேன் பிரபா" என்று அவர் சொன்னபோது அவருக்கு மூன்று மாதத்தில் ஒரு சொல்வ மகள் இருக்கிறார் என்பதை நான் மறக்கவில்லை.
தான் எடுத்துக் கொண்ட முயற்சியை வெகு சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார் முரளி அவரின் எண்ணம் போல அருணா பார்த்திபன் ஜோடி கட்டி.
"இந்த இரண்டு பேரின் குரலும் எவ்வளவு அழகானது" இது எனது மனைவியின் சிங்கள நண்பி.
"இவர்கள் சிட்னியில் தான் இருக்கிறார்களா" பிரமிப்போடு கேட்ட இங்கே பல்லாண்டு காலம் வாழ்கின்ற விருந்தினர்கள். 

இன்று காலை லண்டனில் இருக்கும் அண்ணரிடமிருந்து "எப்ப அந்தப் பாட்டு வீடியோ கிடைக்கும்" என்ற கோரிக்கை மீண்டும் கிளம்பியிருக்கிறது.

ஒலியமைப்பில் வெகு சிறப்பாகப் பங்களித்த பப்பு அண்ணருக்கு என் இதயத்தில் தனியான ஒரு இடம் இருக்கிறது. அவரின் உதவியாகப் பணியாற்றிய சகோதரிக்கும் நன்றி.

விபத்தில் சிக்கி இன்னும் முழுதாகத் தேறாத நிலையிலும் தன் குடும்ப விழாவாக ஏற்று வீடியோ படப்பிடிப்பை முழுமையாகப் பதிவு பண்ணிய அன்புத்தம்பி ஹரிஷ்,
என்னை விட மூத்தவராக இருந்தாலும் "பிரபா அண்ணா" என்று பிரியத்தோடு அழைக்கும் புகைப்படப்பிடிப்பாளர் நாதகோபால் இருவரும் இந்தப் பொன்னான நாளில் மறக்கமுடியாத பங்காளிகள்.

இலக்கியாவின் பிறந்த நாள் கேக் வெட்டும் போது குழுமியிருந்த வாண்டுகள் கை தட்டிய போது தானும் தன் பிஞ்சுக் கை தட்டிச் சிரித்து மகிழ்ந்த இலக்கியா பாடல்களுக்குத் தன் பாஷையில் அபிநயம் பிடித்து ஆடும் போது 
"இந்தக் கணத்துக்காகத் தானே காத்திருந்தாய்" என்று ஆண்டவன் என் மனதில் உட்கார்ந்து கேட்பது போலிருந்தது. அழுது விடுவேனோ?
ஆண்டவனுக்கு நான் எந்த வகையில் இந்த ஏழேழு பிறவியிலும் நன்றிக்கடனைத் தீர்ப்பேன்?

தாயகத்தின் எம் தாய் தந்தையுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய இலக்கியா வாழ்வகத்தில் தாயுமானவர் இளையராஜாவின் பாடல்களோடு கொண்டாடி விட்டார்.

"தொட்டில் மேலே முத்து மாலை வண்ணப் பூவா விளையாட"

நான் தேடிக் கிட்டிய இந்த உலகம் அழகிய பாடல்களால் நிரம்பிய பந்து.

http://www.youtube.com/watch?v=RFfr-OOoPWk&sns=tw

Saturday, October 3, 2015

இலக்கியா பிறந்த நாள் கொண்டாட்டம்

Edit Posted by with No comments




இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியுடன் இலக்கியா பிறந்த நாள் கொண்டாட்டம் 


Saturday, September 5, 2015

இலக்கியாவின் சித்தி ஏற்பாடு செய்த பிறந்த நாள் கொண்டாட்டம்

Edit Posted by with No comments
இலக்கியாவின் முதலாவது பிறந்த நாள் முதலில் யாழ்ப்பாணத்தில் தன் தந்தை வீட்டாரோடும், கொழும்பில் தன் தாய் வீட்டாரோடும் பின்னர் சிட்னியில் நண்பர்களோடும் கொண்டாட ஏற்பாடு.
செப்டெம்பர் 5 ஆம் திகதி, இலக்கியாவின் சித்தி கொழும்பு சபையர் ஹோட்டலில் பிறந்த நாள் விருந்தை ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
கொழும்பில் எங்கள் உறவினர், நண்பர்களோடு மறக்கமுடியாத கொண்டாட்டமாக இது அமைந்திருந்தது.

Thursday, September 3, 2015

இலக்கியா பிறந்த நாள் செஞ்சோலை (கிளிநொச்சி)

Edit Posted by with No comments












இலக்கியா தனது பிறந்த நாள் விருந்தை செஞ்சோலை (கிளிநொச்சி) யில் இருக்கும் தனது அண்ணன், அக்காமாருக்குக் கொடுத்த போது

இலக்கியா பிறந்த நாளுக்கு வாழ்த்து

Edit Posted by with No comments
  1. இன்னைக்கு நல்லூர்ல பாவாடை, சட்டை போட்டு எந்தக் குழந்தையைப் பாத்தாலும் இலக்கியா போல தான் தெரிஞ்சுது.. அவ் 🙈
  2. View Tweet activity
  3. அருமை... பிறந்த நாளு வாழ்த்துகள் இலக்கியா...
  4.  In reply to 
    ஒட்டுப் பொட்டுன்னா மார்க் வருமாம் இலக்கியா அம்மா கண்டிப்புகள் :)) வரும் வாரம் காது குத்தல்
  5. இலக்கியா உங்களின் அம்மாவின் சாயலா! ஒரு டீச்சர் லுக்கு இருக்கு.
  6. தாங்கள் அப்பாவாகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இலக்கியா இலக்கியம் போல் சீரோடும், சிறப்போடும் வாழ்க! வாழ்க!!
  7. இலக்கியா உன் பூர்விக மண்ணில் தாத்தா பாட்டி, மற்றும் பெற்றோரின் நெருங்கிய சொந்தங்களுடன் 1 பிநா கொண்டாடுகிறாய். அன்பே வாழ்க வளமுடன்
  8. பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா!! 😍
  9. அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்.. இப்படிக்கு இலக்கியா மாமா😍😍
  10. இலக்கியா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. 🎉🎊

  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இலக்கியா குட்டிக்கு...