Saturday, September 3, 2016

வன்னியில் கொண்டாடிய இலக்கியாவின் பிறந்த நாள்

Edit Posted by with No comments



இந்த முறையும் இலக்கியாவின் பிறந்த நாளை வன்னியில் இருக்கும் தன்னுடைய அண்ணன், அக்காமார்களுடன் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். கடந்த முதலாவது பிறந்த தினத்தை செஞ்சோலையில் இருக்கும் உறவுகளோடு மட்டுமே கொண்டாட முடிந்தது. இம்முறை குறைந்த பட்சம் இரண்டு இல்லங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தாயகம் செல்ல முடியாத சூழல் நேர்ந்த போது வழக்கம் போலக் கை கொடுத்தார் என் நண்பர்.

வன்னியில் ஏராளமான சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்தால் ஆயிரக்கணக்கில் தேறும் அந்தப் பச்சிளங்குழந்தைகள் யாவருமே தம் தாய், தந்தையைப் போரின் பசிக்குத் தீனியாகக் கொடுத்தவர்கள். அதிலும் 90 வீதமானோர் 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போரில் ஒரு சில நாள் இடவெளியிலேயே தன் தாய், தன் தந்தை என்று ஒன்றன் பின் ஒன்றாக இழந்தவர்கள். ஒரே நாளில் பிறந்த பச்சிளங்குழந்தையில் இருந்து ஒரு வயதே நிரம்பாத பால் மணம் மாறாப் பிஞ்சு அவை.
என் நண்பர் தனது வட்டத்தில் இருக்கும் நட்பு, சொந்தக்காரரை அரவணைத்து இந்த இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்குச் சிறப்பு உணவில் இருந்து, சுற்றுலா வரை ஒருங்கிணைத்துச் செய்பவர். நிதமும் இதே சிந்தனையில் இவர்களைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பார். நாமும் திருமண நாளில் இருந்து பிறந்த நாள் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அவர் வழியாக ஏற்பாடு செய்வோம். செஞ்சோலை, பாரதி இல்லம், அன்பு இல்லம் என்று அவரின்  பணி நீளும்.

இலக்கியாவின் பிறந்த நாளுக்கு இரண்டு இல்லங்கள், அதிலும் குறிப்பாகச் செஞ்சோலை இருக்க வேண்டும். என்ற அன்பு வேண்டு கோளை ஏற்றுத் தாயகத்துக்குப் பயணமான அவர் தலை மேற்கொண்டார். இலக்கியாவின் பிறந்த நாள் நேற்று விடிகாலை அவரிடம் தொலைபேசினேன்.

"சாவக்காட்டில நல்ல உடன் இறால் வாங்க வந்தனான், அன்பு இல்லத்தில இருக்கிற பிள்ளையளுக்கு இறால் குழம்பும், மரக்கறியும் சேர்த்து மத்தியானச் சாப்பாடு குடுப்பம்" என்றார்.

"ஓம் தாராளமாகச் செய்யும், அப்பிடியே செஞ்சோலைப் பிள்ளையளுக்கு என்ன விருப்பமாம்" என்று கேட்டேன்.

"இரவுச் சாப்பாடு தானே கொத்து றொட்டி எண்டால் அவைக்கு நல்லாப் பிடிக்குமாம்" இது நண்பர்.

"அந்தப் பிள்ளையளுக்கு ஐஸ்கிறீமும் வாங்கிக்
குடுமப்பா, ஆசைப்படுவினம்" என்றேன்.

"என்ன விசர்க்கதை கதைக்கிறீர் 200 பிள்ளையள் எல்லோ" என்றார் அவர்.

"பிரச்சனையில்லை வாங்கிக் குடும்" என்று விட்டு அவரை இடைஞ்சல் படுத்தாமல் விட்டேன்.

அன்பு இல்லத்தில் நடக்கும் மதிய உணவுப் படங்களை வாட்சாப்பில் அனுப்பி விட்டுப் பின்னேரம் அளவில் செஞ்சோலையில் இருக்கும் அந்தப் பிள்ளைகள் ஐஸ்கிறீம் சாப்பிடும் வீடியோவையும் அனுப்பி விட்டார். அழுகை வரும் போல
உணர்ச்சி வசம் கடந்த நிலையில் இருந்தேன்.
சிட்னி நேரம் விடிகாலை இரண்டு மணிக்கு இன்னொரு வீடியோ வருகுது அவரிடமிருந்து.
செஞ்சோலையில் இருக்கும் குழந்தைகள் இலக்கியாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடி இரவுணவை அருந்தும் காட்சி அது.

எங்கள் தாயக விடுதலையில் வன்னிச் சனம் இழந்ததுக்கு நிகரில்லை அதுவும் அந்த 2009 போரின் அறுவடையை இலக்கியாவின் சந்ததியே கடன் தீர்த்து முடிக்காது. இப்படியான சின்னச் சின்னச் சந்தோஷங்களையாவது அந்தப் பிஞ்சுகளுக்குக் காட்டிப் பாவ மோட்சம் பெறுவோம் என்று தொடர்வோம். இது வெறும் ஆத்ம திருப்தியின் சிறு துளியே. 
யாழ்ப்பாணத்தில் இருந்து இலக்கியாவின் பிறந்த நாளுக்கு முதல் நாளில் இருந்து நேற்றிரவு வரை இந்த ஏற்பாடுகளைச் செய்த என் நண்பரின் பணிக்கு என் பணம் வெறும் தூசு. இதையெல்லாம் அவரிடம் சொன்னால் "சும்மா இருமய்யா" என்று சொல்லி ஒதுக்கிவிட்டுத் தன் காரியத்தைப் பார்க்கப் போய்விடுவார்.
"உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு அனாதை இல்லையம்மா" பாடலை அனிச்சையாக முணுமுணுத்தது மனம்.

0 comments:

Post a Comment